நீலகிரியில் கடும் பனி பொழிவு கருகிய பசுந்தேயிலைகளுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

by Editor / 14-01-2023 09:24:05am
நீலகிரியில் கடும் பனி பொழிவு கருகிய பசுந்தேயிலைகளுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி உள்ளிட்ட மாதங்களில் உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆண்டு முழுவதும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. அதேபோல் டிசம்பர் மாதங்களில் உறைப் பனியின் தாக்கம் காணப்படும் நிலையில் ஆனால் அதற்கு பதிலாக டிசம்பர் மாதத்திலும் மழையின் தாக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலையின் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக உதகை, கோத்தகிரி, குந்தா, எமரால்டு, அவலாஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குறைவாக பெய்த கடும் உறைப்பனி பொழிவு காரணமாக பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பசுந்தேயிலைகள் கருகி வருகின்றன.

வழக்கமாக ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உறைப்பணியின் தாக்கம் காணப்படும் நிலையில் இந்தாண்டு தாமதமாக துவங்கியுள்ள உறைபனி பொழிவால் பசுந்தேயிலைகள் கருகி வருவதால் தேயிலை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால்  பனியால் கருகிய பசுந்தேயிலைகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via