என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 19-05-2023 04:53:48pm
 என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த ஸ்ரீகாளிங்கபுரத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா (வயது19). இவர் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு விடுதி அறையில் உடன் தங்கி இருந்த மாணவிகள் படிப்பதற்காக மற்றொரு இடத்திற்கு சென்று இருந்தனர்.
அறையில் மாணவி ஜெயா மட்டும் இருந்தார். சிறிது நேரம் கழித்து மற்ற மாணவிகள் வந்து பார்த்த போது விடுதி அறையில் ஜெயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஜெயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உடன் படிக்கும் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், நசரத்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு உடன் தங்கிஇருந்த மாணவிகள் இரவு படிப்பிற்காக சென்ற போது ஜெயா, தனக்கு தலை வலிப்பதாக கூறி சொல்லியிருந்தார் . இந்த நிலையில் அறையில் தனியாக இருந்தபோது மாணவி ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via