எனக்கு இன்னும் வயதெல்லாம் ஆகவில்லை, பதவியையும் எதிர்பார்க்கவில்லை.! பாஜக குஷ்பூ பேச்சு.!

by Admin / 24-07-2021 02:40:14pm
எனக்கு இன்னும் வயதெல்லாம் ஆகவில்லை, பதவியையும் எதிர்பார்க்கவில்லை.! பாஜக குஷ்பூ பேச்சு.!


 
ஆளுநர்கள் நியமனப் பட்டியலில் பெண்கள் பெயர் இல்லை என்றே குறிப்பிட்டேன் எனவும், தனக்கு ஆளுநர் ஆகும் அளவிற்கு இன்னும் வயதாகவில்லை எனவும், எந்தப் பதவியையும் தான் எதிர்பார்க்கவும் இல்லை எனவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 4 நாட்களாக ட்விட்டர் பக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக பல்வேறு செயல்பாடுகள் இருந்ததாகவும், டெல்லியில் இருந்து வந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தை இயக்க முடியவில்லை எனவும், இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்தபோது ட்விட்டர் நிறுவனம் பாஸ்வேர்டை மாற்றியதால் ஏற்பட்ட பிரச்சனை என பதில் அளித்துள்ளதாகவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ்வேர்ட் மாற்றப்பட்ட பிறகும் தனது  ஈமெயில் ஐடியை பதிவு செய்ய முடியாத நிலைமையை இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்புதான் தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தெரியவந்ததாக குறிப்பிட்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிலருக்கு போட்டோக்களும் ட்வீட்டுகள் சென்றிருப்பதாகவும் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள அனைத்து ட்வீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பெயரை மாற்றி அக்கவுண்ட் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு, தற்போது இருக்கும் சூழ்நிலையில் தான் பாஜகவில் பதவி வகித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய அக்கவுண்ட்டை தவறுதலாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புகார் அளித்ததாகவும் , அதுமட்டுமல்லாமல் ட்விட்டர் நிறுவனத்திடம் தனது அக்கவுண்டை மீட்டெடுப்பது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும், பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில், தனது புகைப்படமும் ட்வீட்டுகளும் மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் இருப்பினும் தனது ட்விட்டர் பக்கத்தை செயல்படுத்த முடியவில்லை எனவும், தனது புகைப்படம் மீண்டும் வந்த பிறகும் தனது அக்கவுண்ட்டை  தவறுதலாக பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதால் ஏற்பட்ட அச்சத்தின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பெகாசஸ் வைரஸ் மூலம் எந்த சமூக வலைதள கணக்குகளையும் ஹேக் செய்ய முடியாது எனவும் குறிப்பாக ராகுல் காந்தியின் சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அவ்வாறு ராகுல் காந்தியின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்வதால் பா.ஜ.க விற்கு எந்தவித லாபமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 8 ஆளுநர்கள் நியமனத்தில் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு இல்லை என்றே தெரிவித்ததாகவும், தான் எந்தவித பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதுதான் பாஜகவில் இணைந்து உள்ளதாகவும், ஆளுநர் ஆகும் அளவிற்கு தனக்கு வயதாகவில்லை எனவும் கூறியுள்ள நடிகை குஷ்பு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளைய சமுதாயத்தினரை பொறுப்பிற்குக் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via