சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி

by Editor / 24-07-2021 03:49:13pm
சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி

 


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அவர் குணமடைந்த பின்பு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இரண்டு போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கிலும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபாவுக்கு முதல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரையும், இரண்டாவது வழக்கில் ஜூலை 27ஆம் தேதிவரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு ஏற்கனவே இருதய பிரச்சினை உள்ள நிலையில் நேற்றிரவு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via