அண்ணாமலையார் கோவிலில் 49 லட்சம் ரூபாய் செலவில் இறந்த யானைக்கு மணிமண்டபம்  கட்ட எதிர்ப்பு.

by Editor / 14-09-2023 08:29:31am
அண்ணாமலையார் கோவிலில் 49 லட்சம் ரூபாய் செலவில் இறந்த யானைக்கு மணிமண்டபம்  கட்ட எதிர்ப்பு.

திருவண்ணாமலை மாவட்ட மற்றும் நகர விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.கோட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் நகரச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பல நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகரச் செயலாளர் ஏழுமலை அண்ணாமலையார் கோவிலில் இதுவரை மூன்று யானைகள் இறந்து உள்ள நிலையில் தற்போது நான்காவது யானையாக ருக்கு என்ற யானையும் இறந்துள்ள நிலையில் தற்போது நான்காவது யானைக்கு மட்டும் 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க இன்று பூஜை போட்டது ஏன் என்றும், குறிப்பாக அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்து செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் சூழ்நிலை ஏற்படுவதாகும், மேலும் பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இதற்கு தீர்வு காண அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த நிலையில் இறந்த யானை ருக்குவுக்கு 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் தேவையா என்றும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தாமல் இது போன்று கோயில் வருமானத்தை வீணடிப்பதா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும் இது பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது என்றும், மிக விரைவில் இந்த பலி பீடங்களை அமைக்க வேண்டும் என்றும், குறிப்பாக கோவிலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் முன்பாக இந்த பலி பீடங்களுக்கு பூஜை செய்வது வழக்கமான ஒன்று என்றும், இதனை அண்ணாமலையார் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் கூட கண்டு கொள்ளவில்லை என்று வி.எச்.பியினர் கருத்து தெரிவித்தார்.

மேலும் கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பௌர்ணமி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் திறக்கப்படுவதில்லை என்றும், ஆகவே அனுதினமும் கிரிவலம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கழிவறை வசதிகளுக்காக கழிப்பறைகளை திறந்து வைக்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை நகர வி.எச்.பியினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
 

 

Tags : அண்ணாமலையார் கோவிலில் 49 லட்சம் ரூபாய் செலவில் இறந்த யானைக்கு மணிமண்டபம்  கட்ட எதிர்ப்பு.

Share via