டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 40, 000 நிவாரணம் - ராமதாஸ்

by Staff / 22-09-2023 01:42:43pm
டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 40, 000 நிவாரணம் - ராமதாஸ்

தண்ணீா் பற்றாக்குறையால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40, 000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு விநாடிக்கு 5, 000 கனஅடி வீதம் காவிரியில் கா்நாடக அரசு தண்ணீா் திறந்துவிட்டாலும் அதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற வேறு வழிகளே இல்லை என்ற நிலைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தத்தை கொடுத்து, அதன் வாயிலாக கா்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீரை பெற்று, காவிரி பாசன மாவட்டங்களில் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற ஏதேனும் வழிகள் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு கருதினால் தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40, 000 வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கும் பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

 

Tags :

Share via

More stories