பிடித்தம் செய்த பணத்தை திருப்பி அளிக்க இயக்குநர் உத்தரவு

by Staff / 20-11-2023 01:40:26pm
பிடித்தம் செய்த பணத்தை திருப்பி அளிக்க இயக்குநர் உத்தரவு

ஊழியர்களிடம் பிடித்த செய்த ரூ. 7. 43 லட்சத்தை திருப்பி அளிக்க மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பில் பெருந்துறையில் மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஈரோட்டில் பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இதனை சாலை போக்குவரத்து நிறுவனம் நிர்வகித்து வந்தது. தற்போது இந்த கல்லூரிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதே நேரம், போக்குவரத்துக் கழக பணியாளர்களின் வாரிசுகளுக்கு சேர்க்கையில் இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.சாலை போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாகத்தின்கீழ் கல்லூரிகள் செயல்படும்போது, நிர்வாக பணிகளுக்காக போக்குவரத்துக் கழக பணியாளர்களிடம் குறிப்பிட்ட தொகை பெறப்பட்டு, அவர்கள் பணி ஓய்வு பெறும்போது திருப்பி அளிப்பது வழக்கம். அந்த வகையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 214 ஊழியர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7. 43 லட்சத்தைத் திருப்பி அளிக்க மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via