மணிகண்டன் மீது பாலியல் புகார்:   நடிகை சாந்தினி பதிலளிக்க உத்தரவு

by Editor / 30-07-2021 04:56:06pm
மணிகண்டன் மீது பாலியல் புகார்:   நடிகை சாந்தினி பதிலளிக்க உத்தரவு


பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவுக்குப் பதிலளிக்கும்படி நடிகை சாந்தினிக்கு உத்தரவிட்டது.


திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்புச் செய்ததாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மணிகண்டனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைதுசெய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.சம்மதத்துடன் உறவு பாலியல் வன்புணர்வாகாது.


இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும், மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.அந்த மனுவில், முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை எனவும், தனக்கு எதிராகக் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.தனக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதைத் தெரிந்தே சம்மதத்துடன் உறவுகொண்டதால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது எனக் கூறியுள்ள மணிகண்டன், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்


மணிகண்டனின் மனுவுக்குப் பதிலளிக்க உத்தரவுநடிகையின் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படவில்லை என்ற அவர், தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் என அழுத்தமாக மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தன்னிடம் பணம் பறிக்க முயன்றபோது, அதற்கு இணங்காததால், நடிகை தனக்கு எதிராகப் பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சரான தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க அளிக்கப்பட்ட புகாரில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.


இதையடுத்து, வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Tags :

Share via