கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர், தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் வயது 22 கூலித்தொழிலாளி. இவர் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூளையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். லோகேஸ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் அங்கு பணியில் இருந்தனர்.நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது லோகேஸ்வரனுக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கம் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஸ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஸ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர் பின்னர் அவர்கள் லோகேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :