மேகதாது அணை விவகாரம் அண்ணாமலை தலைமையில்  பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

by Editor / 05-08-2021 03:59:39pm
மேகதாது அணை விவகாரம் அண்ணாமலை தலைமையில்   பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

 

 கர்நாடக பாஜக மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்காக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.


கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில், கர்நாடக மாநில அரசு, குடிநீர் தேவைக்காக என காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்கிறது. அணை கட்டியே தீருவோம்  என  மாநில பாஜக அரசு பிடிவாதமாக கூறி வருகிறது.


இந்த நிலையில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உண்ணாவிரத அறப்போராட்டம் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் - பனகல் பில்டிங் அருகில் தொடங்கி நடைபெற்றது.


இந்த போராட்டத்துக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் இல கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், முன்னாள் அகில இந்திய பாஜக செயலாளர் எச்.ராஜா, தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அகில இந்திய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் விவசாயிகள்,பாஜக தொண்டர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.


இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையிலும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது.இது தொடர்பாக பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்களை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

Tags :

Share via