தமிழக -கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்.

by Editor / 10-01-2023 08:52:45pm
 தமிழக -கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக தமிழக -கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரம்.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் 27க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறந்த சூழலில், கர்நாடக, கேரள மாநிலங்களில் இருந்து பன்றிகள் கொண்டு வரவும் அதேபோல் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரைப் பகுதியில் முன்னதாக அமைக்கப்பட்ட பறவை காய்ச்சல் சோதனை சாவடியுடன், பன்றிக்காய்ச்சல் சோதனை சாவடியும் இணைத்து கூடுதல் கால்நடைதுறை நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, எல்லைப் பகுதியில் நுழையும் கனரக வாகனங்களில் பன்றிகள், பன்றிகளுக்கான தீவனங்கள் கொண்டுவரப்படுகின்றனவா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எல்லை சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்குள் நுழையும் கால்நடை சம்பந்தப்பட்ட கனரக வாகனங்களுக்கு கிருமிநாசிகள் தெளித்தும் சாலைகளில் பிளீச்சிங் பவுடர் கொட்டியும்  தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும், கேரளாவில் இருந்து பன்றிகள், கோழிகள், பன்றி இறைச்சிகள் உள்ளிட்டவர்களை கொண்டு வரும் வாகனங்களை தமிழக எல்லைக்குள் அனுமதிக்காமல் கால்நடைத்துறை அதிகாரிகள் அப்படியே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

 

Tags :

Share via