பாஜக தமிழகத்தில் வழக்கம்போல நோட்டாவிடம் மட்டுமே போட்டியிடுவதாக திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி பேட்டி

by Staff / 02-04-2024 12:58:53pm
பாஜக தமிழகத்தில் வழக்கம்போல நோட்டாவிடம் மட்டுமே போட்டியிடுவதாக திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி பேட்டி

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் அமைந்துள்ள வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து தென்காசி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திராவிட கழக தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைந்தால் ஜனநாயகத்தின் நடைபெறும் கடைசி தேர்தலாக அமையும் என கூறினார். கச்சத்தீவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் பத்திர முறைகேடு குறித்த பிரச்சனைகள் எழுப்பி வரும் நிலையில் அதனை திசை திருப்பும் விதமாக பாஜக அரசு கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்து குற்றம் சாட்ட மோடிக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மோடி ஹீரோவாக இல்லை எனவும் ஜீரோவாக உள்ளார் என தெரிவித்தார். அந்த வகையில் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கும் வேலை என கூறினார்.மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை வெளியிடும் ஆதாரங்கள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லை பொய் சாட்சி சொல்லும் வேலையாக உள்ளது.மேலும் பேசிய அவர், தழிழகத்தில் வழக்கம்போல பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் சூழலே உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி வரும்பொழுதெல்லாம் யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என பிரச்சாரம் செய்து வருகிறார் அது அவ்வாறு இல்லை எனவும் தங்களைத் தவிர யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என்பதை உண்மை என தெரிவித்தார்.

 

Tags :

Share via