திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி மரணத்தில் மர்மம் நீடிப்பு- போலீசார் விசாரணை

by Admin / 06-08-2021 02:30:35pm
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி மரணத்தில் மர்மம் நீடிப்பு- போலீசார் விசாரணை



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது 2-வது மகள் கார்த்திகா (வயது20). இவர் பி.காம். சி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
 
கார்த்திகாவின் அக்காவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் வீட்டில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். வீட்டின் அருகிலேயே கடை வைத்திருப்பதால் கார்த்திகா பலசரக்கு கடையில் தந்தைக்கு உதவியாக வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று மதியம் கடையில் இருந்து வீட்டுக்கு வந்த கார்த்திகா தாயிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து மண்ணெண்ணெய் வாடையுடன் புகைமூட்டம் வருவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் கார்த்திகாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளியலறை கதவை தட்டிய போது கார்த்திகா திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது கார்த்திகா உடலில் பலத்த தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் கார்த்திகா இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் போலீசார் கல்லூரி மாணவி கார்த்திகா தற்கொலை செய்து கொண்டாரா? அதற்கான காரணம் என்ன? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கார்த்திகா சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via