பறவைக் காய்ச்சல் பாதிப்பு:தமிழகம் முழுவதுமுள்ள 26 சோதனைசாவடிகள் தீவீர கண்காணிப்பு.

by Editor / 24-04-2024 10:04:42am
 பறவைக் காய்ச்சல் பாதிப்பு:தமிழகம் முழுவதுமுள்ள 26 சோதனைசாவடிகள் தீவீர கண்காணிப்பு.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில், அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது, எச்5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணியினைத் தீவிரப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான புளியரை வாகன சோதனைச் சாவடியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தற்போது சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு, மீண்டும் தமிழ்நாடு நோக்கி வரும் வாகனங்கள், முறையான சுத்தமின்றி உள்ளே நுழைந்தால், அந்த வாகனங்களை கேரளாவிற்குத் திருப்பி அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையானது, தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான புளியரை மற்றும் மேக்கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் எனவும், பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அங்கு எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அங்கு முகாமிட்டுள்ள கால்நடை மருத்துவ துறை அதிகாரிகளிடம் என்னென்ன மருந்துகள் அடிக்கப்படுகிறது  அடிப்படையில் மருத்துவர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் என்பதை குறித்து கேட்டறிந்தார் மேலும் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ளவும் அவர் மருத்துவர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தமிழகம்முழுவதுமுள்ள 26 கேரளமாநில எல்லையில் அமையந்துள்ள சோதனைசாவடிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 26 சோதனைசாவடிகள் தீவீர கண்காணிப்பு.

Share via