கருணாநிதியின் புகழ் ஆயிரம் ஆண்டுகள்  நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்: ஸ்டாலின்

by Editor / 07-08-2021 07:41:58pm
கருணாநிதியின் புகழ் ஆயிரம் ஆண்டுகள்  நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்: ஸ்டாலின்

 


நூற்றாண்டு காணப்போகும் கருணாநிதியின் புகழ், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம் என, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, ஸ்டாலின்  வெளியிட்ட அறிக்கை:
"தலைவர் கருணாநிதி நம்மைத் தவிக்க விட்டு மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது! அவர் மறையவில்லை, நம்முள் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இன்னமும் தலைவர் கருணாநிதி எங்கும் நிறைந்து நம்மை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறார்! நம் முன்னால் நின்று இயக்கிக் கொண்டு இருக்கும் தலைவராகவும் முதல்வராகவும்தான் நான் அவரைப் பார்க்கிறேன்!


திமுக ஆட்சி மலர வேண்டும் எனக் கனவு கண்டார். அந்தக் கனவை மூன்று மாதங்களுக்கு முன்பு தான் உடன்பிறப்புகளின் உறுதுணையோடு நிறைவேற்றிக் காட்டினோம். திமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தலைவர் கருணாநிதி கனவு கண்டார்களோ அத்தகைய கனவுத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்!


தலைவர் கருணாநிதியின் சிந்தனையை நிறைவேற்றுவதை விட அவருக்குச் சிறந்த அஞ்சலி இருக்க முடியாது அல்லவா?
தனக்குப் பிறகும் தான் இருந்து நடத்துவதைப் போலவே கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் தலைவர் கருணாநிதி. அந்த ஆசையை இந்த மூன்றாண்டு காலத்தில் நிறைவேற்றி வருகிறேன் என்பதே எனது நிம்மதிப் பெருமூச்சு!இனி தமிழகத்தில் திமுகவின் ஆட்சியே என்ற பெரும் உறுதிமொழியை இன்று நாம் எடுப்போம்!


தமிழை, தமிழர்களை, தமிழ்நாட்டை திராவிட இயக்கச் சிந்தனையின் அடிப்படையில் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்!
நூற்றாண்டு காணப் போகும் கருணாநிதியின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்!".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via