பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய மீரா மிதுன் மீது போலீசில் புகார்

by Editor / 07-08-2021 07:39:38pm
பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய மீரா மிதுன் மீது  போலீசில்  புகார்

பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் தான் மீரா மிதுன். இவர் 6 அழகிப் பட்டம் வென்றது மட்டுமல்லாமல், தமிழ் திரை உலகில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகிய இவர், அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அதிகளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தொடர்ச்சியாக பல நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் குறித்து ஆபாசமாக பேசி வரக்கூடிய மீரா மிதுன், தற்பொழுது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது படத்தை மார்பிங் செய்து படங்களில் பயன்படுத்துவதாக இயக்குனர்கள் சிலர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும், பட்டியல் இன சமூகத்தினரை குறிப்பிட்டு அவதூறாக பேசியுள்ளார்.

அந்த சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள் அனைவருமே மோசமானவர்கள் தான் எனவும், அந்த சமூகத்தை சேர்ந்த இயக்குனர்கள் அனைவரும் திரைத்துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மீராமிதுனின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பட்டியலின மக்கள் குறித்து மிக மோசமாக பேசி சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via