மத்திய மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

by Editor / 19-05-2024 11:08:50am
மத்திய மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

” பேரிடர் காலங்களில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேரிடர் பாதிப்புகளை அரசு தடுக்க முடியாது ஆனால் மக்களை தற்காத்துக் கொள்ள நடவடிக்கை வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க திட்டம் என ஊடகங்கள் எந்த ஒரு ஆதாரம் இன்றி செய்தி வெளியிடுகிறது.

 அதேபோல அதிமுகவில் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு என கற்பனை செய்திகள் வெளியிடப்பட்ட வருகிறது. அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ். தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓபிஎஸ் மீண்டும் அதிமுக இணைக்கப்பட்டார்.

கட்சியில் இருக்கும்போது அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பர். ஓபிஎஸ்சின் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி அது ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல.

அதிமுக என்பது அண்ணா திமுக மட்டுமல்ல, ஆன்ட்டி டி.எம்.கே என்பதாகும் அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டார்.

அதிமுகவை தோற்கடிக்க ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டது எந்த வகையில் நியாயம். எனக்கு முதலமைச்சர் பதவி கொடுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி எந்த நேரத்தில் யாரிடமும் கேட்டதில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடிக்காது என கூறினார்கள், ஆனால் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுக்கப்பட்டது.

மத்திய மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஓபிஎஸ்ஐ இணைப்பது மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தாயாராகவில்லை எந்த காலத்திலும் ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவுக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்க உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திமுகவிற்குள் ரகசிய கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அறிவாலயத்தில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். பாஜக கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும்போது பல்வேறு குழப்பங்கள் வந்துள்ளன

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி உடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக ஈடுபட்டால் அக்கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அமைச்சர் பதவி தருகிறோம், கவர்னர் பதவி தருகிறோம் என கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டது. அண்ணாமலையின் பேச்சுக்கள் அரைவேக்காட்டுத்தனமானது என நான் சொல்லவில்லை தமிழக மக்களுக்கே தெரியும்

தமிழ் மொழி , தமிழ் இனம் குறித்து அண்ணாமலைக்கு என்ன தெரியும்? அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெரும்.என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

 

Tags : மத்திய மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 

Share via

More stories