கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி...

by Staff / 02-06-2024 04:38:52pm
கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி...

சிவகாசி அருகே திருத்தங்கல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி, இவர் கடந்த ஓராண்டுக்கு முன் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அம்சரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தங்கப்பாண்டி சுரண்டையில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அம்சரேணுகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தங்கப்பாண்டி கடந்த 29ம் தேதி இரவு வேலை முடிந்து சுரண்டையிலிருந்து சிவகாசிக்கு பைக்கில் வந்தார். குகன்பாறை இடையே வந்த போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த தங்கபாண்டியை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் அளிக்க மனைவி முன் வந்து அவரது உடலில் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக வழங்கப்பட்டதின் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். திருத்தங்கலில் அரசு மரியாதையுடன் தங்கபாண்டி உடலுக்கு ஆர். டி. ஓ விஸ்வநாதன் தலைமையில் டி. எஸ். பி சுப்பையா, வட்டாட்சியர் வடிவேல், இன்ஸ்பெக்டர் வேதவல்லி ஆகியோர் தங்கபாண்டி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via