பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது மோதிய லாரி- மெக்கானிக் பலி .

by Editor / 24-06-2024 11:56:08pm
பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது மோதிய லாரி- மெக்கானிக் பலி .

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்செந்தூரில் இருந்து சேலம் நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், பேருந்து நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மண்மங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது, புதிய மேம்பாலப் பணிகள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலையில் பழுதாகி நின்றுள்ளது.

அதனையடுத்து பேருந்தை பழுதுபார்க்க, கரூரில் வசித்து வரும் நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம்(50) மற்றும் மோகனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(46) ஆகியோர் வந்துள்ளனர். இதற்கிடையே, பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகள், மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அதிகாலை 5 மணியளவில் பேருந்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அதே திசையில் திருநெல்வேலியில் இருந்து மும்பை நோக்கி பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் பின்புறமாக மோதியுள்ளது. அதில், பேருந்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் நித்தியானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் பெரியசாமி மற்றும் லாரி ஓட்டுநர் ஜெயபாண்டி இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் ராஜா மட்டும் காயங்களின்றி தப்பியுள்ளார். தற்போது, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், கிட்டத்தட்ட 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

 

Tags : பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது மோதிய லாரி- மெக்கானிக் பலி .

Share via