நொய்யல் தடுப்பணைக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

by Admin / 11-08-2021 02:21:54pm
நொய்யல் தடுப்பணைக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

 

அணைக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மனை குல தெய்வமாக வழிபட்டு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மங்கலம் அருகே உள்ள வெள்ளஞ்செட்டிபாளையத்தில்  நொய்யல் ஆற்றின் குறுக்கே சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கொங்கு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது.

சுமார் 1000 அடி நீளம்,  20 அடி உயரமுள்ள இந்த கல் தடுப்பணை கட்டப்பட்ட போது ஒரு இடத்தில் மட்டுமே உடைந்து கொண்டே இருந்தது.அந்த இடத்தில் நல்லம்மாள் என்ற சிறுமி உயிர்த்தியாகம் செய்தார். அதன் பிறகு கட்டப்பட்ட இந்த தடுப்பணை உடையாமல் 1000 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
 
இந்த அணை தண்ணீரால் சுமார் 1000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தது. நாளடைவில் இந்த பாசனப்பரப்பு குறைந்து விட்டது. இருந்தபோதிலும் 1000 ஆண்டுகளையும் கடந்து நிற்கிறது.

இந்த அணைக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மனை குல தெய்வமாக வழிபட்டு ஆண்டுதோறும் ஆடி 18 முடிந்து வரும் செவ்வாய்க்கிழமை நாளிலும், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 3-ந் தேதியும் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருகிறார்கள் நல்லம்மன் வழிவந்தவர்கள்.

இந்த அடிப்படையில் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை முதல் நல்லம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக கிலுகிலுப்பை, வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து அலங்கார பூஜை நடைபெற்றது.

தொடர்ச்சியாக பக்தர்களுக்கு மேற்கு ரோட்டரி ஹாலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via