ரூபாய் 17 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

by Editor / 08-07-2024 11:26:16pm
 ரூபாய் 17 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள லாந்தை கிராம ரயில் பாதையில் ரூபாய் 17.32 கோடி செலவில் மேம்பாலம் கட்ட மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டாலும் அருகே முடியவடையாத நிலையில் உள்ள சுரங்கப்பாதையும் தயாரானால் பாதசாரிகள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் அவசர தேவைக்கு மேம்பாலத்தை சுற்றிச் செல்லாமல் எளிதாக ரயில் பாதையை கடக்க முடியும். இந்தப் பகுதியில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா கடந்த சனிக்கிழமை அன்று ஆய்வு செய்தார். ரயில் விபத்துக்களை தவிர்க்க லாந்தை கிராமம் அருகே 2016 ஆம் ஆண்டே
ஒரு சுரங்கப்பாதை அமைக்க  ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சுரங்கப்பாதை மானாமதுரை ராமேஸ்வரம் பிரிவில் சத்திரக்குடி -  ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே 4.5 மீட்டர் அகலத்தில் 3.6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதாக இருந்தது. 2019 ஆண்டே இதற்கான சதுர கான்கிரீட் அமைப்பு பொருத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இணைப்பு சாலை பணிகளும் முடிவடைந்தன. 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் சுரங்கப்பாதை அமைக்க லாந்தை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் சுரங்க பாதை பணி பாதிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் கட்டப்பட்ட சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன. தற்போதைய மழைக்காலம் வருவதற்கு முன்பு சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை கடத்துவதற்கான பணிகள் நடைபெற வேண்டி இருக்கிறது. சுரங்க பாதையில் மழை நீரை கடத்த பைப்புகள் பதிப்பது, லாந்தை கிராமப் பகுதியில் இணைப்பு சாலை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்புதல், இணைப்புச் சாலை ஓரங்களில் சிறிய மழை நீர் வடிகால் அமைப்பது, மழை நீரை சேகரிக்க கிணறு அமைப்பது, சேகரிக்கப்பட்ட நீரை அருகிலுள்ள ரயில்வே பாலத்திற்கு கொண்டு செல்வது, மழைநீர் சுரங்கப்பாதைக்கு வராமல் தடுக்க மேற்கூரை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற வேண்டி இருக்கிறது. ஏற்கனவே இந்த சுரங்கப்பாதைக்காக ரூபாய் 1.73 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தோடு கூடுதலாக அமைய இருக்கிற இந்த சுரங்கப்பாதை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் மழைக்காலத்தில் கிராம மக்கள் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்று வர முடியும். அவசர காலத்தில் உதவப் போகும் கூடுதல் வசதியான சுரங்கப்பாதைப் பணிகளை வருகின்ற மழை காலத்திற்குள் முடிப்பதற்கான ஒத்துழைப்பை லாந்தை கிராம மக்கள் வழங்க வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags : ரூபாய் 17 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

Share via