அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.

by Editor / 18-10-2024 08:58:28am
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, அதில் காலியாக இருந்த இடங்களுக்கு மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடம் பெற்றவர்களில் சிலர் கல்லூரிகளில் சேராமல் படிப்பைக் கைவிடுகின்றனர்.

இதன் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ் இடங்களும், 62 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. அதேபோன்று, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 503 எம்பிபிஎஸ் இடங்களும், 519 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 1,143 இடங்கள் அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக இயக்குநர் டாக்டர் சங்குமணி கூறியதாவது:
“அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றதால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைத்துள்ளனர். இந்த இடங்கள் அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்” என்றார்.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13.5 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், சுயநிதி கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இடங்கள் பெற்ற பின், தமிழக கல்லுாரிகளை கைவிடுகின்றனர்.

 

Tags : அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.

Share via