மது குடிக்க பணம் இல்லாததால் வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது.

by Editor / 18-10-2024 08:51:38am
மது குடிக்க பணம் இல்லாததால் வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் பீகாரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வேலை செய்து அதே பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு தினேஷ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்கள் நான்கு அவரை சரமாரியாக தாக்கி விட்டு 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து தினேஷ்குமார் பல்லடம் காவல்நிலையத்தில் இதுகுறித்து உடனடியாக புகார் அளித்துள்ளார். தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் நான்கு பேரை தேடி வந்தனர். இந்நிலையில் பல்லடம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், மகேஷ்வரன்,சாகுல் ஹமீது, மற்றும் புவனேஸ்வரன் என்பது தெரிய வந்தது மேலும் இவர்கள் நேற்று இரவு மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தினேஷ்குமாரை தாக்கி பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது குடிக்க பணம் இல்லாததால் வடமாநில தொழிலாளியை தாக்கி 4 பேர் கொண்ட கும்பல் பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : 4 பேர்

Share via