திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை திருக்கார்த்திகை பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

by Editor / 13-12-2024 06:30:16am
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை திருக்கார்த்திகை பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களும் வெகு விமர்சையாக தீபத் திருவிழா நடைபெற்றது.

10ம் நாளான இன்று அதிகாலை 03.28 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்  அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவில் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட  தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி வேத தந்திரங்கள் முழங்க பரணி தீபம்  ஏற்றப்பட்டது.  அண்ணாமலையார் கருவரையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை  சிவாச்சாரியர் கையில் ஏந்தி கோவிலில் உள்ள அம்மன் சன்னதி சென்று  தீபம் ஏற்றப்பட்டு இதனை தொடர்ந்து மற்ற சன்னதிகளுக்கு கொண்டு சென்று தீபத்தினை ஏற்றினார். 

இந்த பரணி தீப தரிசனத்தை  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பரணி தீபத்தினை உண்ணமுலையம்மன் சன்னதியில் ஏற்றுவதற்கு வைந்த வாயில் வழியாக கொண்டு வரப்பட்டது. அப்போது பக்தர்களும் பரணி தீபத்தினை காண கூட்டமாக குவிந்தனர். மேலும் இன்று மாலை 6 மணியளவில் கோவின் பின் புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார்  மலை மீது மகா தீபம்  ஏற்றப்படும். இந்த விழாவில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 

 

 

Tags : அண்ணாமலையார் கருவரையின் முன்பாக அதிகாலை 03.28 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது....

Share via

More stories

Logo