19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களுக்கு வாழ்த்து கூறி விஜய் பதிவு.

தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் விஜய் நியமித்த நிலையில் வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக புதியதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை மேற்கொண்டார். பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் சில மாவட்டங்களில் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்திருத்தது. தவெக மாவட்டச் செயலாளர்கள் பதவிகளுக்கு லஞ்சம் வாங்கக் கூடாது. லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் த.வெ.க.வில் மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், இணை செயலாளர் உள்ளிட்ட 5 நிலையிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில் 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக 20 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக தவெகவில் மாவட்ட நிர்வாகிகள், நகரத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களுக்கு வாழ்த்து கூறி விஜய் பதிவு.