நூதன முறையில் கடன்தொகை ரூ.4.60 லட்சம் அபேஸ்! -உதவி செய்வது போல் ஏமாற்றிய நண்பர்கள்!!

by Admin / 17-09-2021 04:05:16pm
நூதன முறையில் கடன்தொகை ரூ.4.60 லட்சம் அபேஸ்! -உதவி செய்வது போல் ஏமாற்றிய நண்பர்கள்!!


 
புதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட, 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை நூதன முறையில் மோசடி செய்த வங்கி ஊழியர், போலி பத்திரிக்கையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், தனது நண்பர் ஐயப்பன் உதவியுடன், வங்கி ஊழியர் மணிகண்டனிடம் பேசி, வங்கியில் கடன் பெற முயற்சித்துள்ளார்

அப்போது, சரவணனின் வங்கி கணக்கில் போதுமான அளவிற்கு பணப் பரிவர்த்தனைகள் இல்லாததால், கடன் பெறுவதற்கான விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாகக் கூறிய மணிகண்டன்,

தன்னுடைய சொந்த பணம் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை, சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்புவதாகவும், அதனை ஐயப்பன் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும் மணிகண்டன் கூறியுள்ளார்.

அவ்வாறு வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றது போல் காண்பித்தால், கடன் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சரவணன், தம்முடைய வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை ஐயப்பனுக்கு அனுப்பியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து சரவணனுக்கு வங்கியில் இருந்து எந்த கடன் தொகையும் வரவில்லை. இதுகுறித்து மணிகண்டனிடம் கேட்டபோது, வேறு காரணங்களுக்காக கடன் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 ஆனால், 3 மாதங்களுக்கு பிறகு கடனை திருப்பி செலுத்த கோரி, வங்கியில் இருந்து சரவணனுக்கு நோட்டீஸ் சென்றுள்ளது

இதனையடுத்து வங்கிக்குச் சென்று விசாரித்த போது, வங்கிக்கடன் தொகையை அவர்களது பணம் எனக் கூறி ஏமாற்றியது அறிந்துள்ளார்.

 இது தொடர்பான வழக்கில், வங்கி ஊழியர் மணிகண்டன், ஐயப்பன் மற்றும் சிவானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஐயப்பன் என்பவர் போலி பத்திரிக்கையார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via