ஏடிஎம் மையம் உடைத்த வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே கல்லுவிளை பகுதியில் கனரா வங்கி கிளை அருகில் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த வங்கியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 3-ம் தேதி திங்கள்கிழமை வங்கி மேலாளர் சுஜாதா என்பவர் வந்து பார்த்தபோது வங்கி ஏடிஎம் மையத்தின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அவர் உடனடியாக வங்கியின் உள்ளே சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு வாலிபர்கள் வந்து ஏடிஎம் மையத்தை அடித்து உடைத்து திருட முயன்றது தெரியவந்தது.
இது குறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் ஆய்வு செய்து, அந்த பகுதி கூட்டமாவு என்ற இடத்தை சேர்ந்த அகில் (24) பிரதீப் (25) என்ற இரண்டு வாலிபர்கள் ஏடிஎம் உடைத்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் இரவு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது தானியங்கி கதவு திடீரென மூடியதாகவும், அதை திறக்கும் போது மீண்டும் மூடியதால் ஆத்திரமடைந்து கதவை அடித்து உடைத்ததாக தெரிவித்தனர். இருப்பினும் இது கொள்ளை முயற்சியாக இருக்குமா? இதன் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :