கடையநல்லூர் அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துஆக்கிரமிப்பு -நோட்டீஸ் வழங்கல்.

மேல கடையநல்லூர் அருள்மிகு அண்ணாமலை நாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான பகுதியில் பாத்திமா நகர் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பிலும் இந்து சமய அறநிலை துறை சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அனைவரும் வாடகைதாரர்களாக கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் வாடகைதாரர்களாக தங்களது சம்மதத்தை ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு சம்மதம் தெரிவிக்காதவர்கள் இடத்தை கையகப்படுத்தி கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்கள் 83 பேருக்கு சுவாதீன நோட்டீஸ் வழங்கும் பணி இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இன்று மேற்கொள்ள பாத்திமா நகர் பகுதிக்கு வந்தனர்.
அப்பொழுது இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த திரளானோர் திரண்டு நோட்டீஸ் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை எடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து நோட்டீசை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். இதன் பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நோட்டீஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவு நிகழ்வுகளை வழங்கினர்.
இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : கடையநல்லூர் அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துஆக்கிரமிப்பு -நோட்டீஸ் வழங்கல்