"உயிரோடு விளையாடியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" : கே.பாலகிருஷ்ணன்

by Editor / 22-08-2021 05:36:43pm

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி.பார்க்கில் அ.தி.மு.க ஆட்சியின் போது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்நிலையில் கட்டிடத்தைத் தொட்டாலே சிமெண்ட் உதிர்ந்து கீழே விழுந்தது குடியிருப்புவாசிகளை அதிர்ச்சியடையச் செய்தது.

இதேபோல் சென்னை ராமாபுரத்தில் உள்ள குடியிருப்பின் கட்டிடத்திலும் சிமெண்டும் உதிர்ந்து விழுந்தது. அடுத்து பெரம்பலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மீதும் இதே புகார் எழுந்துள்ளது. இதனால் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில், "கே.பி.பார்க் குடியிருப்புகளைப் போலவே இப்போது பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. தரமற்ற வீடுகளால் பண இழப்பு மட்டும் ஏற்படவில்லை, மிகப்பெரும் உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

எனவே, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களையும், செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். எளிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via