கூடுதலாகத் தொகுதி தருகிறோம்.ஆட்சியில் பங்கு தருகிறோம்.என அழைத்தார்கள்- திருமாவளவன் அதிர்ச்சிதகவல்.

by Editor / 13-04-2025 06:29:38pm
கூடுதலாகத் தொகுதி தருகிறோம்.ஆட்சியில் பங்கு தருகிறோம்.என அழைத்தார்கள்- திருமாவளவன் அதிர்ச்சிதகவல்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். ஆளும் கட்சியாக இன்றைக்கு வீரநடை போடுகிறது. திமுகவிற்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அப்படியொன்றும் திமுக பலவீனமாக இல்லை. திமுக, தி.க., கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இணைந்து இருக்கிறோம் என்றால் இவையெல்லாம் ஜனநாயக, முற்போக்கு, சமூகநீதி அரசியலை பேசுகிற இயக்கங்கள். ஜாதியை, வன்கொடுமையை எதிர்த்து பேசுகிற இயக்கங்கள். இந்த இயக்கங்கள் பலவீனப்படும் என்றால், விடுதலை சிறுத்தையும் பலவீனப்படும்.நான் பேசுகிற அரசியல் தான் திமுக, தி.க., பேசுகிற அரசியல். திமுகவை விழ்த்துவோம் என்றால், விசிகவையும் விழ்த்துவோம் எனப் பொருள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் திமுகவை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை திமுக எதிர்கொள்ளும். ஆனால், திமுகவும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது.என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். திமுக கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசை காட்டினார்கள். விடுதலை சிறுத்தைகள் இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு இடம் அளித்து இல்லை. அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் விசிக இல்லை. வளைந்து கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். வளைந்துக்கொடுப்பது எல்லாம் முறிந்து விடாது எனப் புரிந்துகொண்டார்கள்.என்னை யாரும் முறித்து, உடைத்து முடியாது. என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தேற்றுப் போயுள்ளனர். 


2026ம் ஆண்டு தேர்தல் நமக்கு ஒரு சோதனை. திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பதை விட, சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்கிற முயற்சி. அதிமுக கூட்டணியில் அவர்களின் தொகுதியை பறித்து, அதில் பெறும் வாக்குகளைத் தங்களின் வாக்குகள் என பாஜக கூற நினைக்கிறது. அதிமுகவை மெல்ல மெல்ல தேய நினைப்பது தான்.ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்தப் பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும். ஒட்டுமொத்தமாகப் பெரியாரின் அரிசுவடிகளை அழித்து விட முடியும் எனக் கணக்குப் போடுகிறார்கள். அதற்கு விடுதலை சிறுத்தைகள் இடம் கொடுக்க மாட்டோம். அதுவும் திமுகவிற்காக அல்ல. பெரியார், அம்பேத்கர் அரசியலுக்காக. திமுக தன்னைத் தற்காத்துக்கொள்கிற வலிமையோடு களத்தில் நிற்கிறது. அதற்கு நாம் எந்த வகையிலும் துணை நிற்கப்போவது இல்லை. தி.க.வும், திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல, விசிகவும் இணைந்து மூன்று குழல் துப்பாக்கியாக செயல்படும்" இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

 

Tags : கூடுதலாகத் தொகுதி தருகிறோம்.ஆட்சியில் பங்கு தருகிறோம்.என அழைத்தார்கள்- திருமாவளவன் அதிர்ச்சிதகவல்.

Share via