மின்சார வாரியத்தில் 55 ஆயிரம் காலிப்பணியிடங்கள் - அமைச்சர்

by Editor / 25-08-2021 09:03:00pm
மின்சார வாரியத்தில் 55 ஆயிரம் காலிப்பணியிடங்கள் - அமைச்சர்

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக இருக்கும் சுமார் 55 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் அரசுத்துறை பணியிடங்களை நிரப்புவது குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது மின்சார வாரியத்தில் காலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சார வாரிய தொழிற்சங்கத்துடன் ஆலோசனை நடத்திய பிற்பாடு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 'தமிழக மின்வாரியத்தில் உள்ள 1 லட்சத்து 45 ஆயிரம் பணியிடங்களில் தற்போது 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என கூறியுள்ளார். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள சுமார் 8,900 மின்மாற்றிகள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via