பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை,திமுக அரசு சாதனை!-பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

by Admin / 17-01-2026 12:20:20pm
பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை,திமுக அரசு சாதனை!-பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொங்கல் ,போகி பண்டிகை கொண்டாடிய இரண்டு நாட்களில் டாஸ்மாக்கினுடைய வருமானம் அதிகரித்துள்ளது குறித்த எக்ஸ் வலைதள பதிவு ,,,

பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை: பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி - மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!

தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக்  வாயிலாக  மட்டும்  ரூ.518  கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக  செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத  திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும், மேலும் குடிகாரர்களாக்கி மது வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இது சாதனை அல்ல.... வேதனை.

போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகிருந்த நிலையில்,  நடப்பாண்டில் அதை விட  14.10% அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19% அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில்  மட்டும் தான் திமுக அரசு சாதனை படைக்கிறது.

கடந்த ஆண்டு பொங்கல்  திருநாளின் போது போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில்,  நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில்  மது வணிகம்  ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடியையும்  இந்த மாதத்திலேயே திரும்பவும் வசூலித்து விட இலக்கு நிர்ணயித்து  திமுக அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தான்  எழுகிறது.

பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும் போது  19% ஆகும்.  திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9%  மதுக்கடைகளை மூடிய திமுக அரசு, 19%  கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத்  திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிலையிலும் மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை, மதுப் பெருக்கத்தை நோக்கித் தான் பயணிக்கிறது என்பதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை. மக்கள்விரோத  மது ஆதரவு அரசுக்கு வரும்  தேர்தலில்  தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

 

Tags :

Share via

More stories