ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருது விடுதல் போன்ற போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
நாட்டு மாடுகள் இதற்காக வளர்க்கப்படாததால், அந்த மாடுகளின் இனமே அழிந்துவருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி என். கிருபாகரன் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்), நீதிபதி பி. வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போரும் விவசாயிகளும் நாட்டு மாடுகள் வளர்ப்பதை மானியம், ஊக்கத் தொகை போன்றவற்றை அளித்து அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
- கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் பங்கேற்பதற்கு முன்பாக அந்த மாடுகள் 'நாட்டு மாடுகள்' என்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதிசெய்ய வேண்டும். எந்த கால்நடை மருத்துவராவது, கலப்பின மாடுகளை 'நாட்டு மாடுகள்' என சான்றளித்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்.
- மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பதை முடிந்த அளவு அரசு கைவிட வேண்டும். இது 1960ஆம் ஆண்டின் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக்கூடும்.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு என 2017ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதன் காரணமே, புளியங்குளம், உம்பளச்சேரி, மலைமாடு, காங்கேயம் போன்ற நாட்டு மாட்டு இனங்களைக் காப்பதுதான்.
- வெளிநாட்டு மாடுகளுக்கும் கலப்பின மாடுகளுக்கும் திமில் பெரிதாக இல்லாத காரணத்தால் அவற்றைப் பிடிப்பது கடினமாக இருப்பதாக மனுதாரர் கூறியிருந்தார் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
Tags :