38 மாவட்டங்களில் பசுமை புத்தாய்வுத் திட்டம்-அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

by Editor / 04-09-2021 05:13:13pm
38 மாவட்டங்களில் பசுமை புத்தாய்வுத் திட்டம்-அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், அத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

சுற்றுச்சூழல் துறை தற்போது வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சுற்றுச்சூழல் துறை சிறந்த வகையில் செயல்படும் விதமாக உரிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பசுமைக் கட்டிடம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய பசுமைத் திட்டங்களைக் கண்டறிவதற்கும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும், 'முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்' தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

2021- 2022ம் ஆண்டில், தமிழகத்தில் ஒரு கடற்கரைக்கு 10 கோடி ரூபாய் வீதம், இரு கடற்கரைகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் தமிழக சுற்றுச்சூழல் துறை மூலம் கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகளை இயக்குவதற்கான இசைவாணை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்கு பதிலாகத் தகுதியான தொழிற்சாலைகளுக்கு கால அளவினை நீட்டித்துத் தொகுப்பாக வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடனும் மற்றும் முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 'பசுமை முதன்மையாளர் விருது' ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை 32 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கல்.

தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களைக் கொண்டு பிரச்சாரம்.

சென்னை - ஆயிரம் விளக்குப் பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.

 

Tags :

Share via