விவசாயிகளுக்கு 6 மாதத்துக்குள் 1 லட்சம் மின் இணைப்பு

by Editor / 15-09-2021 04:07:18pm
விவசாயிகளுக்கு 6 மாதத்துக்குள் 1 லட்சம் மின் இணைப்பு

மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட அனைத்து பிற ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி் அறிவுறுத்தி உள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.

தமிழக முதலமைச்சர் ஆணையின்படி விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம், மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று (14 ந் தேதி) தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:

முதலமைச்சர் ஆணைப்படி, மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2021 -2022 சட்டசபை எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில்,

பதிவு மூப்பு அடிப்படையில்...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்து காத்திருப்பு பட்டியலிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பதிவு மூப்பு அடிப்படையில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்துள்ள விவசாய பெருமக்கள் தமது தயார் நிலையை தெரிவிக்க ஏதுவாக அறிவிப்பு கடிதங்கள் மின்வாரிய கோட்ட அலுவலகங்களிலிருந்து பதிவு அஞ்சலில் அனுப்பப்படும்.

விண்ணப்பதாரர் நிலம் மற்றும் கிணறு உரிமைக்கான ஆவண நகல்களை பிரிவு அலுவலரிடம் காண்பித்து அவர்களது தயார் நிலையை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். பெயர் மாற்றம், புல எண் மாற்றம் ஏதேனும் தேவைப்பட்டால் அதற்கான ஆவணங்களை பிரிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

இந்த தயார் நிலைப் பதிவின் அடிப்படையில் மின்வாரியம் மதிப்பீடு தயார் செய்து மின் இணைப்பு வேலைகளை முடித்து மின் இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அதனடிப்படையில் விண்ணப்ப தாரர் மோட்டார், கெப்பாசிட்டர் உள்ளிட்ட சாதனங்களை வாங்கி பொருத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மின்சார கட்டணத்தை தமிழக அரசு மானியமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via