கோவையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் மீட்பு

by Editor / 18-09-2021 12:28:29pm
 கோவையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி  நிலம் மீட்பு

கோவையில், சென்னனுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, ஒன்பது ஏக்கர் பரப்பு கொண்ட ரூ.10 கோடி மதிப்புள்ள புன்செய் நிலம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.கோவை - சிறுவாணி சாலையிலுள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னனுாரில் உள்ளது பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில். கோவிலுக்கு சொந்தமாக, அதே கிராமத்தின் வடமேற்கில், 14.5 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது.கோவில் ஊழிய மானிய முறையில், கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், மோகனசுந்தரம், பழனிச்சாமி ஆகியோருக்கு, தலா மூன்று ஏக்கர் வீதம், மொத்தம் ஒன்பது ஏக்கர் புன்செய் நிலம், இந்து சமய அறநிலையத்துறை வழங்கியிருந்தது. இவர்கள், சரியான முறையில் ஊழிய மானியத்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து, கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், இணை கமிஷனர் செந்தில் வேலவன், கோவில் ஊழிய மானிய நிலத்தை மீட்க உத்தரவிட்டார்.நேற்று, கோவை மண்டல அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில், செயல் அலுவலர்கள் நாகராஜ், சரவணக்குமார், கனகராஜ், பிரபாகரன், சந்திரன், அறநிலையத்துறை ஆய்வர்கள் உமாமகேஸ்வரி, கீதா, நில அளவையர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் அம்சவேணி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவல்லி ஆகியோர் கொண்ட குழுவினர், நிலத்தை மீட்டனர்.உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில், ''தற்போது மீட்கப்பட்டுள்ள, 9 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, சுமார் பத்து கோடி ரூபாய் இருக்கும். கோவிலுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் செலுத்த வேண்டிய குத்தகை மற்றும் வரியினங்களை, சரியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க இயலாது,'' என்றார்.

 

Tags :

Share via