கூட்டுறவு வங்கியில் போலி நகைக்கு கடன் : 3 பேர் சஸ்பெண்ட்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டது தொடர்பாக, மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த ஆட்சியின் இறுதியில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு இருந்த பயிர்கடன்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, நகைக்கடன்களை ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட பயிர்கடன், நகைக்கடன்களில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள பீமாரப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், தனது உறவினருக்கு சொந்தமான வளையல்களை மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைத்து கடன் பெற்றுள்ளார். தற்போது இந்த நகை போலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு நடத்தினர். அவர்கள் நடத்திய ஆய்வில் 14 வாடிக்கையாளர்களுக்கு, போலி நகைகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர்களாக பணியாற்றிய சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும், கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், மல்லசமுத்திரம் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன், திடீரென ராஜினாமா செய்துள்ளார். போலி நகைகளை வைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றிருப்பது, அங்குள்ள விவசாயிகளை அதிர வைத்திருக்கிறது.
Tags :


















.jpg)
