ஐ.டி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை

by Editor / 28-09-2021 12:08:31pm
ஐ.டி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை

ராசிபுரம் அருகே புதிய நிறுவனம் தொடங்க பெற்றோர் பணம் தர மறுத்துவிட்டதால், விரக்தியில் ஐ.டி. நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். விவசாயி. இவரது மூத்த மகன் சதீஷ் (42). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, சதீஷ் கடந்த ஓராண்டாக புதுப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக லாவண்யா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சதீஷ், புதிய நிறுவனம் தொடங்க முடிவெடுத்து, தந்தையிடம் நிலத்தை விற்பனை செய்து பணத்தை தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால், தந்தை ராஜன் நிலத்தை விற்க மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த சதீஷ் நேற்று வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கை, வயிறு பகுதியில் அறுத்துக்கொண்டதுடன், தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். பெற்றோர் அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, திடீரென சதீஷ், அருகில் இருந்த தோட்டத்து கிணற்றில் குதித்தார்.

இதில், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via