சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர்  2 லேப்டாப் எடுத்து செல்வதை தடுத்த அதிகாரி

by Editor / 30-09-2021 03:49:39pm
 சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர்  2 லேப்டாப் எடுத்து செல்வதை தடுத்த அதிகாரி



தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் எடுத்து சென்றதை தடுத்த பாதுகாப்பு அதிகாரியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தூத்துக்குடி செல்வதற்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காலை 5.15 மணிக்கு வந்தார். அப்போது, பாதுகாப்பு சோதனை பிரிவில் அமைச்சரின் கைப்பையை ஸ்கேன் மூலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பரிசோதித்தார்.


அமைச்சர் பையில் 2 லேப்டாப்கள் வைத்திருந்ததைப் பார்த்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம் 2 லேப்டாப்களை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டார்.


உடனே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நான் மாநில நிதி அமைச்சர். எனது தேவைக்காக எடுத்து செல்கிறேன் என்றார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
மேலும் அந்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாக புரியவில்லை. இந்தி மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சரும், இந்தியில் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


உடனடியாக விமானநிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சரை சமாதானப்படுத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர், பயணிகளுக்கு உதவி செய்யத்தான் பாதுகாப்பு அதிகாரிகளே தவிர, தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவர் 2 லேப்டாப் விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று ஏதாவது விதிமுறை உள்ளதா? என்று கேட்டார். அப்படி எந்த விதிமுறையும் கிடையாது என்று கூறி, நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம், அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.


அத்துடன், நிதியமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டார். அதன்பின்பு அமைச்சர் சமாதானமாகி விமானத்தில் புறப்பட்டு சென்றாா். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த ஆண்டு இதேபோல் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஒருவர், திமுக எம்.பி. கனிமொழியிடம் பிரச்னை செய்தார். அது பெரும் சா்சையானது. அதன்பின்பு பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளும், விமான நிலைய உயரதிகாரிகளும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via