நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பழைய நடைமுறையில் விற்பனை

by Editor / 03-10-2021 05:10:40pm
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பழைய நடைமுறையில் விற்பனை

ஆன்லைன் மூலம் நெல் விற்க எதிர்ப்பு கிளம்பியதால், நேரடி கொள்முதல் நிலையங்களில் பழைய நடைமுறையில் விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் நெல் பயிரிடும் உழவர் பெருமக்கள் பயனடையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவர் பெருமக்கள் பயன் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இணைய வழி பதிவு முறையை அக்டோபர் 1 ந்தேதி முதல் செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில் உழவர் பெருமக்கள் 2021 22 காரீப் சந்தைப் பருவம் துவங்கும் அக்டோபர் 1 ந்தேதி முதல் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc edpc.in ஆகிய இணைய தளங்களில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய நாளினைத் தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறுவை பருவ நெல் அறுவடையானது 1.10.2021 தேதிக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு, நெல்வரத்து இருந்து வரும் சூழ்நிலையில் 1.10.2021 முதல் இணைய வழியில் (Online) பதிவு செய்து நெல்விற்பனை செய்வதற்குப் பதில் ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உழவர் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி பதிவு மேற்கொண்டு நெல் விற்பனை செய்ய விரும்பும் உழவர் பெருமக்களிடமிருந்து ஆவணங்களைச் சரிபார்த்து அதனடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2021 குறுவை, கார் பருவ நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இணைய வழியில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய விரும்பும் உழவர் பெருமக்களுக்கு உதவிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதலால் உழவர்பெருமக்கள் தாங்கள் விரும்பும் வகையில் அதாவது “ஏற்கனவே இருந்த நடைமுறை” அல்லது “Online வழியாக” உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து தங்கள் 2021 குறுவை, கார் பருவ நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Tags :

Share via