தமிழக காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்கள் இல்லாத ஏற்படுத்த வேண்டும் முதல்வர் விருப்பம்

by Editor / 31-07-2022 11:03:38am
தமிழக காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்கள் இல்லாத ஏற்படுத்த வேண்டும் முதல்வர்  விருப்பம்

தமிழக காவல்துறையில் காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தக் கொடியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

மத மோதல்கள், சாதி மோதல்கள் இல்லை. துப்பாக்கிச்சூடு இல்லை. கள்ளச்சாராய மரணம் இல்லை. காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளது. குறைந்துள்ளது என்று தான் சொல்கிறேனே தவிர, முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை.

காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். சிறு தவறு செய்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தியாவின் பல நகரங்களுக்கு முன் மாதிரியானது நமது காவல்துறை. சட்டம் – ஒழுங்கு, மக்களைக் காப்பதே காவல்துறையின் முழுமுதற் பணி.

இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் காவலர்களை நியமித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இன்று காவல் துறையில் 1 டிஜிபி, 2 ஏடிஜிபி, 15 ஐ.ஜி.க்கள், 20,000 காவலர்கள் என்று பெண்கள் களப் பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கு காவல்துறையில் அதிகாரமளித்தவர் கருணாநிதி.

குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கி சிறப்பித்துள்ள, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்கிறேன். தமிழ்நாட்டு காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள் இது. மிக உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இரட்டை மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டுக்கே கிடைத்துள்ள வரலாற்று பெருமை இது.

ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்களுக்கும் கிடைத்துள்ள பெருமை இது. 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்கான விருது இது. இரவு,பகல் பாராது, உயிர் பாராது ஆற்றிய பணிக்கான கௌரவம் இது. இந்த சிறப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :

Share via