வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போகிறேன்" - கடலூர் திமுக எம்பி

by Editor / 10-10-2021 10:24:53am
வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போகிறேன்

கடலூரில், முந்திரி தொழிற்சாலை பணியாளர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக எம்பி உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாக எம்.பி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. ரமேஷின் முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜு வழக்கை விசாரணைக்கு எடுத்த சிபிசிஐடி, சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தது. சிபிசிஐடி விசாரணையில், முந்திரி ஆலையிலிருந்த பொருட்களை திருடிவிட்டதாக, செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராஜுவை 5 பேர் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கோவிந்தராஜுவின் உடலில் காயங்கள் இருந்ததால், அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல, புகார் அளிக்கச் சென்றவர்களிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது, திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் தன்னை தாக்கிவிட்டதாக கோவிந்தராஜு கூறியதாக தெரிகிறது.

அதன்பிறகு தொழிற்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர், வினோத் ஆகியோர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக நடராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடலூர் தொகுதி திமுக எம்பி ரமேஷ் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவான நிலையில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் சட்ட வல்லுநர்கள் வில்சன், என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார்.

கொலைக் குற்றச்சாட்டு வழக்கு பதிவான நிலையில், இதுகுறித்து எம்.பி. ரமேஷை தொடர்பு கொண்டுகேட்டபோது, வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via