மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம்... ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார் -விஜய பிரபாகரன்
மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி தோல்வி வரும் போகும் அதற்காக கட்சி சோர்ந்துவிடவில்லை என அவர் கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும் எனினும் அவர் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது நாட்கள் ஆகும் எனவும் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பிக் கொண்டு வர தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து வருவதாக கூறிய அவர், மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்லும் என முடித்துக்கொண்டார் விஜய பிரபாகரன். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அவர் கொண்டு வந்திருப்பதாகவும் புகழாரம் சூட்டினார். விஜயகாந்த் மகனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தேமுதிகவை பொறுத்தவரை எழுச்சியோடு தான் இருக்கிறது என்றும் வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதால் தேமுதிகவை மீண்டும் தூக்கி நிறுத்துவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் மக்கள் தங்களை அங்கீகரிக்காததால் தோல்வியை தழுவ நேரிட்டதாகவும் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை அப்படியே தான் உள்ளது எனவும் அவர் கூறினார். இதேபோல் தொண்டர்களும் அதே பிடிப்போடு கட்சியில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.எந்த லட்சியத்துக்காக தேமுதிக தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியப் பயணத்தை நோக்கி பயணிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் பேச்சில் அரசியல் முதிர்ச்சி வெளிப்படத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
Tags :