அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை நிறுத்தினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் ஓ.பன்னீர்செல்வம்

by Editor / 25-10-2021 03:58:53pm
அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை நிறுத்தினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் ஓ.பன்னீர்செல்வம்


அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்களை நிறுத்தினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரையில் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அண்ணா திமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் இது. தொண்டர்கள் இயக்கமாகவே இன்றளவும் உள்ளது. அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகின்றது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். அம்மா ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வந்தார். ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார். அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் திட்டம், மினி கிளினிக் போன்ற பல்வேறு திட்டங்கள் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. இந்த திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் ஆகும்.


தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எந்த திட்டங்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அண்ணா தி.மு.க. அரசின் திட்டங்களை நிறுத்தினால் மக்களை திரட்டி நாங்கள் சட்டபூர்வமாக போராடுவோம். அம்மா உணவகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளேன். தொடர்ந்து அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த உணவுகளை வழங்க வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன்.


புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு மிகவும் அவசரப்படுகின்றது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டுமென நினைக்கின்றனர். அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன்தான் பேசவேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வில் அத்துமீறிய செயல்களினால் அண்ணா திமுகவின் வெற்றிகள் பல்வேறு இடங்களில் மறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு அண்ணா திமுக 6 மாத காலம் அவகாசம் கொடுத்து இருந்தது. இனியும் அண்ணா திமுக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக செயல்பட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்

 

Tags :

Share via