மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்... மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நாடகம்...

by Admin / 29-12-2021 01:36:29pm
மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்... மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நாடகம்...


திருமங்கலம் அருகே துணியை உலர்த்த சென்ற கர்ப்பிணி பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்த கணபதிராஜா என்பவர் நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து 6 மாதத்திற்கு முன்பு திருமணம் முடித்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பையடுத்து திருமங்கலம் அருகே சித்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கணபதிராஜாவின் மனைவி நாகலெட்சுமி 5 மாத கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் நாகலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 8 மணியளவில் வீட்டின் மாடியில் துணிகளை காயப்போட சென்றபோது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் கீழே விழுந்த கர்ப்பிணி பெண் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் பெண்ணை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வில்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணான நாகலட்சுமியின் சகோதரர் வைரம் தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் வில்லூர் போலீசார் கணவன் கணபதி ராஜாவை விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக தன்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. காதல் மனைவியை கொலை செய்துவிட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். 


   


 
 

 

Tags :

Share via