நாடு திரும்ப உக்ரைனுக்கு 3 விமானங்கள் ஏர் இந்தியா இயக்குகிறது

by Admin / 19-02-2022 04:14:42pm
 நாடு திரும்ப உக்ரைனுக்கு 3 விமானங்கள் ஏர் இந்தியா இயக்குகிறது

ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் அங்கு போர் பதட்டம் நிலவுகிறது.
 
இதனால் அங்கிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஏற்கனவே இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

தற்போதுள்ள விமான சேவையை பயன்படுத்தி மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக இந்தியா-உக்ரைன் இடையே அதிக விமானங்களை இயக்குவது தொடர்பாக விமான நிறுவனங்களுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். 

மேலும் கட்டுப்பாடுகளை நீக்கி தேவைக்கு ஏற்ப விமானங்களை இயக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப வசதியாக வருகிற 22, 23 மற்றும் 26-ந்தேதிகளில் 3 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 

மேலும் விமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பதட்டம் அடைய வேண்டாம் என்றும், மத்திய அரசு போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

 

Tags :

Share via