மகன் கொலை வழக்கு 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
அதிமுக பிரமுகரின் மகன் லிபின்ராஜா கடத்தி கொலை செய்து நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் புதைத்த வழக்கில் நாகர்கோவில் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த எபின், ஸ்டீபன்ராஜ் இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்.அதிமுக பிரமுகர் மகன் கொன்று புதைத்த வழக்கில் இருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகியாகவும், குலசேகரம் அருகே அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் லிபின் ராஜா ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 4-ஆம் தேதி மாலையில் லிபின் ராஜா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின் ராஜாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து நேசமணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் லிபின் ராஜாவுக்கும் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், நெல்லை - குமரி மாவட்ட எல்லையான பழவூர் பகுதியில் லிபின் ராஜாவின் சடலம் சாலையோரமாக ஓடையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய நாகர்கோயில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் நாகர்கோயில் குற்றவியல் நடுவர் மன்றம் எண் இரண்டில் சரணடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணையில், நண்பர்களான எபின் மற்றும் ஸ்டீபன்ராஜ் லிபின் ராஜாவுக்கும் இடையே ஏற்கனவே அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்தது. அதனால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது என்று தெரிய வந்தது.
அதை தொடர்ந்து கடந்த நான்காம் தேதி இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து லிபின் ராஜாவை அடித்து கொலை செய்து தங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சாலையோரம் புதைத்ததாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :