ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி

by Editor / 17-05-2021 08:12:39pm
ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி

நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்திலேயே மாவட்ட ஆட்சியரகம் வந்த ஒரு புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.

நாகை, புத்துார் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் ஷெரின்ராஜ். இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விக்டர்ராஜ் மகள் சூர்யாவுக்கும் நாகை புனித லூர்து மாதா தேவாலயத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.

பின்னர், மணமக்கள் ஷெரின்ராஜ்- சூர்யா ஆகியோர் தங்கள் மணக்கோலத்துடன் நாகை மாவட்ட ஆட்சியரகம் வந்து, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் நிதி அளிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மணமக்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் உடனடியாக சந்தித்தார். அப்போது, ஷெரின்ராஜ்- சூர்யா தம்பதியர் ரூ. 50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

அந்த உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மணமக்களை பாராட்டி, வாழ்த்தினார்.

கரோனா பாதிப்பால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொண்டு நம்மால் இயன்ற உதவியை அரசுக்கு செய்யலாம் என்று கருதினோம். அதனால், அரசின் கரோனா நிவாரணப் பணிகளுக்கு எங்களால் இயன்ற உதவியாக ரூ. 50 ஆயிரம் நிதியை வழங்கினோம். கொண்டாட்டங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட தற்போது எங்களுக்குப் பல மடங்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் கிடைத்துள்ளது என மணமக்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via