ராஜினாமா செய்யமாட்டேன் விடாப்பிடியில் இம்ரான்கான்

by Staff / 25-03-2022 03:20:19pm
 ராஜினாமா செய்யமாட்டேன் விடாப்பிடியில் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2018ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறார், தற்போது  எதிர்க்கட்சிகள் அனைத்தும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவரை வெளியேற்றுவதற்கு ஓரணியில் திரண்டுள்ளதால் அவருக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து சில உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் விலகிவிட்டதாகவும், இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

எனவே,நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாக அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், "என்ன வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என்று இம்ரான் கான் மறுத்துவிட்டார். மேலும், சண்டையின்றி சரணடையப் போவதில்லை என்றும், மோசடிகளின் அழுத்தத்தின் கீழ் ஏன் விலக வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வியாழன் இரவு தேசிய நாடாளுமன்ற செயலகம் வெள்ளிக்கிழமை அமர்வின் 15 அம்ச நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது, அதில் நம்பிக்கையில்லா தீர்மானமும் அடங்கும்.

பாகிஸ்தானின் பணவீக்கத்தை நிர்வகிக்கத் தவறியதாகக்கூறி இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் 20 பேர் விலகியுள்ளதாகவும், அவர்கள் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரி இம்ரான் கான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எந்தவொரு பாகிஸ்தான் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தானில் அடுத்த பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via