காவல்துறைக்கு சவாலாக இருந்த ‘பவாரியா’ கொள்ளை கூட்ட தலைவன் கைது.

by Editor / 08-04-2022 06:51:38pm
காவல்துறைக்கு சவாலாக இருந்த  ‘பவாரியா’ கொள்ளை கூட்ட தலைவன் கைது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன். இவர் காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவராக இருந்தார். இவருக்கு சொந்தமாக சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே பெரிய பங்களா ஒன்று இருந்தது. இதில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இரவு முகமூடி அணிந்த மர்ம கும்பல் தாளமுத்து நடராஜனின் பங்களாவிற்குள் புகுந்து வீட்டில் இருந்த காவலாளி மற்றும் தாளமுத்து நடராஜன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 200 பவுன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பல்தான் இந்த சம்பவத்தை செய்தது என தெரியவந்தது.

இதையடுத்து இவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டிவந்தனர். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் வீட்டிலும் அவரை கொலை செய்து கொள்ளை சம்பவம் நடந்தது. தமிழகம் முழுவதும் இதேபோன்று 24 சம்பவங்கள் நடந்த நிலையில் இந்த கும்பல்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.இதன் தொடர்ச்சியாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பவாரியா கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக அன்றைய வடக்கு மண்ட ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ராஜஸ்தான், உ.பி. அரியானா, மத்திய பிரதேசம் பலமாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பவாரியா கும்பலைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ், பீனாதேவி, ஜெயில்தார்சிங், பப்லு, சந்து ஆகிய 7 பேரை போலீசார்  கைது செய்தனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பின்னர் ஜாமீனில் வெளியவந்த நிலையில் ஜெயில்தார்சிங், அவரது மனைவி பீனாதேவி, சந்து, பப்லு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

பின்னர் இவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் இவர்களை 15 வருடங்களாக தேடிவந்தநிலையில் சென்னையில் பதுங்கிருந்த ஜெயில்தார் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பீனா தேவி, சந்து, பப்லு ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

Tags :

Share via